பட்ஜெட் நாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்தாமல், பாஜகவின் தேர்தல் பிரச்சாரமாகவே வெளிப்பட்டிருக்கிறது. இதில் கூறியுள்ள அம்சங்கள் எதற்கும் உரிய சான்றுகள் கிடையாது. வாக்குறுதிகள் அனைத்தும் வழக்கம்போல் கூறப்பட்டு, காற்றில் பறக்கவிடப்படுபவையேயாகும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். இப்போது அது வெளியிடப்படவில்லை.
இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தனது கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்திக்கொள்கிறது. நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை நாட்டு மக்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் மறைப்பதற்கான சூழ்ச்சியே இதுவாகும். அதேபோன்றே குடியரசுத் தலைவர் உரையும் வெற்று ஆரவார உறுதிமொழி களும், ஊதிப் பெரிதாக்கப்பட்ட புள்ளிவிவரங்களையுமே கொண்டிருந்தன.
குடியரசுத் தலைவர் உரையில் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் கொள்கைகள் குறித்து எதுவும் இல்லை. மாறாக, அயோத்தியில் ராமர் கோவில் வந்திருப்பதே அரசின் மாபெரும் சாதனை என்று பீற்றிக்கொள்ளப்பட்டது. இவருடைய உரையானது ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற நாட்டின் கொள்கை அறிக்கையா என்பதையே சந்தேகப்பட வைத்திருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து குடியரசுத் தலைவர் உரை எதுவுமே கூறவில்லை.
இது மிகவும் கவலையளிக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் “வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று பலஇடங்களில் கூறப்பட்டிருந்த போதிலும், எதார்த்த நிலை இதற்கு நேரெதிராகும். ஒன்றிய அரசாங்கத்தின் பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக இருக்கின்றன. நாட்டு மக்களின் அவலங்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக பாஜக தலைமை யிலான அரசாங்கம் தன்னுடைய கூட்டுக்களவாணி பில்லியனர்களுக்கு வரி வெட்டுகள் மற்றும் பல சலுகைகளை அளித்திருப்பதன் மூலம் அவர்களைக் கொழுக்க வைப்பதற்கே முன்னுரிமை அளித்திருக்கிறது.
நாட்டு மக்கள் நாள்தோறும் நடத்திடும் போராட்டங்கள் குறித்து பட்ஜெட் சற்றும் கவலைப்பட வில்லை. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இதர விளிம்புநிலை மக்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை துரோகம் இழைக்கப்பட்டிருக்கின்றனர். எனவே பொய் உறுதிமொழிகளை வாரிவழங்கியிருக்கின்ற இந்த இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராகக் கண்டன முழக்கம் எழுப்பி, பாஜக அரசாங்கத்தின் பொய் உறுதிமொழிகளை அம்பலப்படுத்துவோம்! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து